Sunday, March 27, 2016

Triangle (2009)




Triangle - ஒரு குழப்பமான அனுபவம்

புதுசு புதுசாய் படங்களை தேடித் தேடி பார்த்தாலும், ஏற்கனவே பார்த்த சில படங்கள் எப்போதும் திரும்பத் திரும்ப பார்க்கத் தூண்டும். அப்படி சில படங்கள் என் பட்டியலில் உண்டு. அதில் Triangle என்கிற ஹாலிவுட் படம் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. காரணம் அதன் குழப்பும் கதையமைப்பு. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், ஒரு புதிய குழப்பம் மண்டையை கிறுகிறுக்க வைக்கும். மேலும் அதற்கான விடைகள் படத்தில் இருப்பதாக நம்பி ஒவ்வொரு முறையும் பார்த்து மேலும் என்னைக் குழப்பிக் கொள்கிறேன். படத்தின் முடிவிலாவது அதற்கான விடையை ‘இதுதான்டா கதை. இப்படித்தான் நாங்கள் இதை எடுத்திருக்கிறோம்’ என்று முடித்திருக்க மாட்டார்கள். ஒரு Unsolved mystery-ஆக அப்படியே படம் முடிந்து விடும். பல புதிர்கள், வெகுசாதாரண காட்சியில் கூட நம்மைக் கடந்து சென்றது, அதற்கான தொடர் காட்சிகளில் நம் மண்டையில் உறைக்கும். ஆனால், ‘ஆமாம் இது இப்படித்தான்’ என்று எந்த முடிவுக்கும் வந்து விடாமல், ‘இல்லயில்ல. இப்படியிருக்க வாய்ப்பேயில்லை’ என ஏதோ ஒன்று நம்மைத் தடுக்கும்.

இந்த கட்டுரை சற்றே நீ…ளமானது. இந்தப் படத்தை இதுவரை பார்க்காதவர்களும், இதுவரை இந்தப் படத்தைப் பார்த்து வந்த குழப்பங்களே போதும் என்று நினைப்பவர்களும் இதற்கு மேல் இதனைத் தொடர வேண்டாம்.


‘ஜெஸ்’ ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட தனது ஐந்து வயது மகன் ‘டாமி’ கண்ட கனவுக்கு ஆறுதல் சொல்வதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. அது ஒரு கெட்ட கனவு. மீண்டும் மீண்டும் அவனுக்கு வருவதாக அவன் அழுகிறான். இந்தக் காட்சியின் தொடக்கத்திலிருந்து, திரையில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு காட்சியும், ஒவ்வொரு டீட்டெய்லும், ஒவ்வொரு வசனமும், ஒரு காரணத்தோடு அமைந்திருக்கும். அவனோடு துறைமுகத்திற்கு கிளம்புவாள். ஆனால் டாமி வர அடம் பிடிப்பான். ஆறுதல் சொல்லி அவனை அழைத்துச் செல்வாள். ஆனால் அவள் மட்டும் துறைமுகத்திற்கு வந்திருப்பாள். சிறுவன் டாமி ஸ்கூலுக்கு சென்று விட்டதாக கூறுகிறாள். அங்கே க்ரெக், விக்டர், டௌனி, அவனது மனைவி சேலி, அவளது தோழி ஹீதர் ஆக ஆறு பேர் கொண்ட குழு ஒரு பாய்மரப் படகில் கடலில் பயணிக்கின்றனர். அது ஒரு சாதாரண weekend picnic போன்றதொரு பயணம். கிளம்பும்போதே சோம்பலாக இருந்த ஜெஸ், படுத்து விடுகிறாள். அவள் கண் விழிக்கையில் கடலின் ஒரு கரையில் அடித்து ஒதுங்கிய நிலையில் கண் விழிக்கிறாள். ஹீதரின் குரல் கேட்டு திரும்புகையில்தான் அது ஒரு கனவு என்று உணர்கிறாள். அவள் இன்னும் படகில்தான் இருக்கிறாள். ஆனால், உடைந்த நினைவுகளுடன். சற்று நேரத்தில் கடலில் அவர்கள் பயணித்த அந்த பிராந்தியம் முழுக்க காற்றடிப்பது சட்டென்று நின்று போகிறது. தூரத்தில், சில கருமேகக் கூட்டங்கள் கடுமையான மின்னல்களுடன் இவர்களது படகை நோக்கி வருகிறது. தாக்குகிறது. படகு பேரலைகளால் புரட்டப்படுகிறது. தலைகீழாக கவிழ்கிறது. அந்த Electromagnetic Storm நின்றதும் தத்தளித்துக் கொண்டிருந்தவர்கள், தலைகீழாக கவிழ்ந்த அந்தப் படகில் ஏறுகிறார்கள். ஆனால், ஹீதரை மட்டும் காணவில்லை. இறந்துவிட்டாள் என்று அறிவிக்கின்றனர். ஆனால், சேலி அதை நம்ப மறுக்கிறாள். சில நேரம் கழித்து ஒரு பெரிய கப்பல் இவர்களை நோக்கி வருவதை பார்க்கிறார்கள். அந்தக் கப்பலின் பெயர் ‘AEOLUS’ (எயோலஸ்). உதவி கேட்டு கத்துகின்றனர். யாரோ அவர்களை அங்கிருந்து பார்க்கிறார்கள். ஆனால், யாரும் ரெஸ்பான்ட் செய்யவில்லை. இவர்களே கப்பலை நெருங்கி அதில் ஏறுகின்றனர். அதன் பிறகு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களனைத்தும் நம்மைக் குழப்பத்தின் உச்சிக்கே இட்டுச் செல்லும். அந்தக் கப்பலில் வேறு யாரும் இருக்கவில்லை. இவர்கள் மட்டுமே அங்கே இருக்கிறார்கள். அப்படி இருக்கையில் ஜெஸ்ஸின, வீட்டுச் சாவி, கார் சாவி மற்றும் டாமியின் படம் அடங்கிய அவளின் சாவிக் கொத்து ஏற்கனவே அங்கே இருக்கிறது. அந்தக் கப்பலின் அறைகள் முழுவதும் ஏற்கனவே பார்த்ததைப் போல இருப்பதாக ஜெஸ் கூறுகிறாள். ஐந்து பேரும் ஐந்து மூலைகளில் இருக்க, ஜெஸ் தன்னைப் போலவே ஒருத்தியைப் பார்க்கிறாள். முகமூடியணிந்த ஒரு உருவம் மற்றவர்களைக் கொலை செய்கிறது. கடைசியில் அந்த முகமூடியணிந்த உருவம் ஜெஸ்ஸைக் கொலை செய்ய முயலும் போது நடந்த சண்டையில் அந்த முகமூடியணிந்த உருவம் பெண் குரலில் அவளை எச்சரிக்கிறது. ‘அனைவரையும் கொன்றால்தான் வீட்டிற்கு செல்ல முடியும்’ என்று அவளை எச்சரித்துவிட்டு கடலில் விழுந்து விடுகிறது. அப்போதுதான் அவள் மேலும் குழப்பமடைகிறாள். கடலில், இன்னொரு ஜெஸ், க்ரெக், விக்டர், டௌனி, சேலி அடங்கிய குழு தங்களை காப்பாற்ற உதவும்படி கூச்சலிடுகிறது. ஆனால், இவளோடு வந்த க்ரெக், விக்டர், டௌனி, சேலி அனைவரும் இறந்து விட்டனர். ஒரு மர்மமான புதிரில் மாட்டிக் கொண்டதாக அவள் குழம்புகிறாள். அந்த இரண்டாவது குழு கப்பலில் ஏறுகிறது. அவர்களும் கொல்லப்படுவதை காண்கிறாள். மீண்டும் ஒரு குழு கடலில் வருகிறது. அவர்களும் கொல்லப்படுகிறார்கள். முகமூடிக் கொலைகாரன் தனக்கு முன்னரே வந்த ஜெஸ் என்பதை உணர்கிறாள். இப்போது ஜெஸ் முகமூடியணிந்து கொள்கிறாள். க்ரெக்கை கொல்கிறாள். மூன்றாவது குழுவில் வந்த ஜெஸ்ஸை எச்சரித்து விட்டு கடலில் குதிக்கிறாள். கடற்கரையில் அடித்து ஒதுங்கிய நிலையில் கண் விழிக்கிறாள்.வீடு திரும்புகிறாள். அங்கே காலையில் வீட்டிலிருந்து கிளம்புகையில் இருந்த நிலையில் இருக்கும் ஜெஸ்ஸைக் காண்கிறாள். டாமி, படம் வரைந்து கொண்டிருக்கிறான். ஜன்னலில் பின்புறம் சத்தம் கேட்டு திரும்புகையில் கைதவறி பெயிண்ட் கலக்கி வைத்திருந்த குவளை தவறி விழுகிறது. ஆத்திரத்தில் வீட்டிலிருந்த ஜெஸ் அவனை அடிக்கிறாள். வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஜெஸ் வீட்டிற்குள் நுழைந்து ஜெஸ்ஸைக் கொன்று விடுகிறாள். பிணத்தை ஒரு பெரிய பையில் திணித்து காரில் வைத்துக் கொண்டு கிளம்புகிறாள். காரில் ஒரு பறவை மோதி இறக்கிறது. டாமி அழுகிறான். காரை நிறுத்தி இறங்கி அந்தப் பறவையை சாலையிலிருந்து அகற்றுகிறாள். அதனை சாலையோரத்திலிருக்கும் கடற்கரையில் எறியும்போது அங்கே ஏற்கனவே நிறைய பறவைகள் இறந்த நிலையில் வீசப்பட்டிருப்பதைக் காண்கிறாள். மீண்டும் காரில் கிளம்புகிறாள். டாமி அழுதுகொண்டே இருக்கிறான். அவனை சமாதானப்படுத்த திரும்புகையில் கார் விபத்துக்குள்ளாகிறது. டாமி இறந்துவிடுகிறான். காரை ஓட்டி வந்த ஜெஸ் தப்பிக்கிறாள். மீண்டும் வாடகைக் காரில் க்ரெக்கின் படகில் பயணிக்கிறாள். படம் முடிவடைகிறது.

இது ஒரு நேரடி கதை சொல்லல் முறை. Chronological story telling. ஆனாலும் குழப்பம். மொத்தக் கதையும், படத்தின் ஆரம்பத்தில் இருந்து முதலில் காட்டப்படும் ஜெஸ்ஸின் பார்வையில் இருந்தே கதை சொல்லப் படுகிறது. இந்தக் கதையின் அடிப்படைக் கரு Time Travel, Time Loop, Time Paradox, Greek Mythology இவைகளிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தைப் பலமுறை பார்த்து நான் புரிந்து கொண்டவைகள் பின்வருமாறு:

Curse of AEOLUS – எயோலஸின் சாபம்


கிரேக்க புராணத்தின்படி மூன்று காலகட்டத்தில் மூன்று எயோலஸ்கள் வாழ்ந்துள்ளனர். இதில் எந்த எயோலஸ் என்பதைப் பிரித்துக் கூறுவது கடினம். இவர் காற்றுக் கடவுளாகவும் வணங்கப்படுகிறார். எயோலியன் என்கிற இனத்தை உருவாக்கியவர். பொசைடனின் மகன். என்றெல்லாம் கூறப்படுவதுண்டு. ஒடிஸியஸ் தனது வீட்டுக்கு செல்ல காற்று தேவைப்பட்டதாகவும், ஆகவே இவர் ஒரு பையில் காற்றை ஊதித் தந்ததாகவும், ஒரு வரலாறு உண்டு. ஒடிஸியஸ் அந்தக் காற்றுப் பையுடன் பயணிக்கையில் சக பயணி ஒருவர், அந்தப் பையில் விலையுயர்ந்த பொருட்கள் இருப்பதாக எண்ணி அதனைத் திறந்துவிட, அதிலிருந்து விடுபட்ட எயோலஸின் காற்று, பெரும்புயலாக மாறி, ஒடிஸியஸின் அந்தப் பயணம் மிக நீண்ட, முடிவில்லாத பயணமாக மாறியதாக ஒரு வரலாறு கிரேக்கப் புராணத்தில் உண்டு.

இதன்படி, டாமி, அந்த பெயிண்ட் டப்பாவை தட்டி விட்டதற்காக ஜெஸ் அவனை அடிக்கிறாள். பயத்தில் அன்று அவன் கண்ட கனவுதான் இந்த எயோலஸ் கப்பல் பயணம் என்றும் கொள்ளலாம். படத்தின் முதல் காட்சியில், டாமி தான் மீண்டும் மீண்டும் காணும் ஒரு கனவினால் அழுவதாகவும், அதற்காக அவள் அவனைத் தேற்றுவதாகவும் காட்டப்பட்டிருக்கும். இங்கே ஒரு விசயத்தை உண்மையில் கவனிக்கத் தவறியிருப்போம். படத்தின் ஆரம்பத்திலேயே இரண்டு ‘ஜெஸ்’ காட்டப்பட்டிருக்கும். இரண்டு ஜெஸ்ஸிற்கும் உடைகளும் வேறு வேறாய்த்தான் இருக்கும். ஒன்று Sun dress அணிந்த ஜெஸ். மற்றொன்று Shorts அணிந்த ஜெஸ். ஷார்ட்ஸ் அணிந்த ஜெஸ், டாமிக்கு ஆறுதல் சொல்வாள். ஆனால், அடுத்த காட்சியில், சன் ட்ரெஸ் அணிந்த ஜெஸ் அந்த பெயிண்ட் கறையினை சுத்தம் செய்வாள். அடுத்த காட்சியில் ‘ஷார்ட்ஸ்’ ஜெஸ், வரமாட்டேன் என்று முரண்டுபிடிக்கும் டாமியிடம், ‘அம்மா இனிமேல் அடிக்க மாட்டேன். அந்த பெயிண்ட் கறைகளை சுத்தம் செய்து விட்டேன்’ என்று ஆறுதல் கூறுவாள். இந்தக் காட்சியினை படத்தின் ஆரம்பக் காட்சியாக வைக்கக் காரணம் ‘எயோலஸ் சாப’த்தை உணர்த்துவதற்காக இருக்கலாம். ஆகவே டாமியின் கனவில், டாமியின் படங்கள் மட்டும் வருகிறது. டாமி இருப்பதில்லை. அந்தப் பயணத்தில் ஆக்ரோஷமான ஜெஸ்ஸும், பயந்து நடுங்கும் ஜெஸ்ஸும் வருகின்றனர். அந்தப் பயணம் ஒரு முடிவற்ற பயணமாகவும், திரும்பத் திரும்ப நிகழும் ஒன்றாகவும் இருக்கிறது.




Electromagnetic Storm – மின் காந்தப் புயல்

Electromagnetic Storm is a doorway to both Alternate Multiverse as well as to its Original Universe. இதன் வழியாக பயணிக்கும் எதையும் கவர்ந்திழுத்து/ மாற்றியமைத்து நிஜ உலகத்திற்கோ அல்லது மாற்று உலகத்திற்கோ அனுப்ப இதனால் முடியும். இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் அதிமுக்கிய காரணகர்த்தா இந்த மின் காந்தப் புயலாகவும் இருக்கலாம். ஆக இந்தக் கதையை,


மின் காந்தப் புயலுக்கு முந்தைய ஜெஸ்ஸின் நிகழ்வுகள்

மின் காந்தப் புயலுக்கு பிந்தைய ஜெஸ்ஸின் நிகழ்வுகள்
என்று இரண்டாகப் பிரிக்கலாம்.

மின் காந்தப் புயலுக்கு முன், ஜெஸ் டயர்டாக இருக்கிறாள். உறங்குகிறாள். கனவு காண்கிறாள். படகு ஓட்டுகிறாள். புயலில் மாட்டிக் கொள்கிறாள். இவையனைத்தும் சாதாரண நிகழ்வுகள். ஆனால், அதன் பின்னர் நடப்பவைதான் நிஜ உலக வாழ்க்கைக்கு அப்பாற்பட்டவை. நடைமுறைக்கு ஒத்து வராதவை. அவை இந்த மின் காந்தப் புயலால் ஏற்பட்ட கால மாற்றமாகவும், கால முரணாகவும் இருக்கலாம்.




 Accident – விபத்து


இது சாத்தியமற்ற ஒன்றுதான். ஆனால் இந்த நோக்கிலும் கதை பொருந்துகிறது. மின் காந்தப் புயலில் சிக்கிய படகில் அனைவரும் இறந்து விடுகின்றனர். ஹீதர் மட்டுமே உயிர் பிழைக்கிறாள். ஆகவே அவள் மட்டும் இவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. இவர்கள் ஐவரும் எயோலஸ்ஸில் ஏறுகிறார்கள். முகமூடியணிந்த ஜெஸ்ஸினால் கொல்லப்படுகின்றனர். இறந்தவர்களுக்கு ஏது சாவு. அனைவரும் மீண்டும் அதே கப்பலுக்கு வருகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். இதில் ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். ஐவரில் ஜெஸ்ஸைத் தவிர மற்ற நால்வரும் கொல்லப்பட்ட பிறகே மீண்டும் ஒரு குழு கப்பலை வந்தடைகின்றனர். ஆக, ஜெஸ் மீண்டும் வீட்டிற்கு வருகிறாள். டாமியின் கண்களுக்கு ஆவியாகத் தெரிகிறாள். டாமி அவளோடு வர மறுக்கிறான். காரில் சன் ட்ரெஸ் அணிந்த ஜெஸ்ஸுடன் டாமி வருகிறான். விபத்து ஏற்பட்டு இறக்கிறான். ஷார்ட்ஸ் அணிந்த ஜெஸ் ஆவியாக நின்று பார்த்துக் கொண்டிருக்கிறாள். தன் பின்னால், ஒரு கார் டிரைவர் தன்னை சவாரிக்கு அழைக்கிறான். அவனோடு வந்து துறைமுகத்தில் இறங்கி மீண்டும் பயணிக்கிறாள். ஓகே. இது உங்களை எச்சாக குழப்பியிருக்கும்.




முகமூடிக் கொலைகாரன்


எயோலஸ் கப்பலில் ஏற்கனவே ஒரு கொலைகாரன் பதுங்கியிருப்பதாய் வைத்துக் கொள்வோம். அதெப்படி? அதற்கு கதையில் எந்த இடத்திலாவது ‘க்ளூ’ தரப்பட்டிருந்ததா? ஆம். க்ளூ இருக்கிறது. அந்த முகமூடிக் கொலைகாரனது கைகள் க்ளோஸ் ஷாட்டில் இரண்டு முறை காட்டப்பட்டிருக்கும். அந்த கைகளில் ஆண்களைப் போல முடிகள் இருக்கும். அதேபோல ஜெஸ்ஸின் உயரத்திற்கு ஏற்ற ஒல்லியான கதாபாத்திரம் படத்தில் யார் இருந்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஆம். இவர்தான். அந்த Cab Driver.


அது கூட, டபுள் ஆக்சன் காட்சியை படமாக்க ஜெஸ்ஸுக்கு போட்டிருந்த டூப்பாகவும் இருக்கலாம். அப்படி யோசித்தால், அந்தக் காட்சியில் கேப் டிரைவரே தேவையில்லையே. கப்பலிலிருந்து தப்பித்து வந்து சாலையில் லிப்ட் கேட்டு கையை நீட்டி ஜெஸ் நின்றிருப்பாள். அடுத்த காட்சியில் அவள் வீடு இருக்கும் தெருவில் ஓடி வந்து கொண்டிருப்பாள். கார் தேவைப்பட்டிருக்கவில்லை, காரில் வந்ததாகவும் காட்டப்படவில்லை. கிளைமாக்ஸில் மட்டும் எதற்கு கார்? கார் டிரைவர்?

Room No. 237


எல்லாவற்றிற்கும் மேல் அந்தக் கனவில் Room No.237 ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த அறையில் கண்ணாடியில் GO TO THEATRE என்று எழுதப் பட்டிருக்கும். THE SHINING படத்தில் சிறுவன் Danny உள்ளே செல்ல பயப்படும் அதே அறை எண் 237. அந்த படத்திலும் அந்த அறையில் கண்ணாடியில் ரத்த எழுத்துக்கள் இருக்கும். அந்தப் படமும் டேனியின் வாய்க்குள் இருக்கும் Tony-யின் கற்பனைக் கதையாகக் காட்டப்பட்டிருக்கும். ஆகவே இந்தப் படத்தில் உள்ள மொத்தக் கதையும் டாமியின் கனவு. கனவு. கனவு என்று உங்களைக் குழப்பி இந்தப் பதிவை முடித்துக் கொள்கிறேன்.


Wednesday, March 23, 2016

The Four Horsemen - History


The Four Horsemen

அடிக்கடி இந்த வார்த்தையை நாம் சில இடங்களில் பிரயோகிக்கப்படுத்தப் படுவதைப் பார்த்திருக்கலாம். அல்லது கேட்டிருக்கலாம். எங்கே?

வேறு எங்கே நாம் இதையெல்லாம் கேள்விப்பட்டு விடப் போகின்றோம், ஹாலிவுட் படங்களில்தான். இதனை ஆளாளுக்கு எடுத்துக் கொண்டு நீ கொஞ்சம் நான் கொஞ்சம் என்று பிய்த்து கொத்து பரோட்டா போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் யாரிந்த Four Horsemen?

இதை தெரிந்து கொள்ள கொஞ்சூண்டு கிறித்துவ வரலாற்றை புரட்ட வேண்டியது அவசியம். Book of Revelation அல்லது திருவெளிப்பாடு அல்லது புதிய ஏற்பாடு. இதை கிறிஸ்துவர்களின் 27-ஆவது புத்தகம் என்றும், கடைசி புத்தகம் என்றும் சொல்லலாம். இந்தப் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் கிறிஸ்துவர்கள் கொடிய துன்பங்களுக்கு இலக்காயிருந்தனர். அனேகமாக இது ரோம் பேரரசன் நீரோவின் காலம் (கி.பி.54 - 68) என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் பேரரசன் தொமீசியன் காலமாகவும் (கி.பி.89 – 96) இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்தப் புத்தகம் அல்லது சுருள் (Book or Scroll) ஏழு முத்திரைகளால் (Seven Seals) மூடி பாதுகாக்கப்படுகிறது. ஒவ்வொரு முத்திரையும் ஒவ்வொரு சின்னத்தைக் கொண்டிருக்கிறது. அதில் முதல் நான்கு சின்னங்கள்தான் இந்த ‘நான்கு குதிரைவீரர்கள்’ The Four Horsemen.



இவர்கள்தான் அந்த நான்கு குதிரை வீரர்கள். மேலுள்ள படம் வரையப்பட்ட ஆண்டு 1887. விக்டர் வாஸ்னெட்ஸாவ் (Victor Vasnetsov) என்பவரால் வரையப்பட்டது. இதில் முதல் முத்திரையாக புதிய ஏற்பாட்டை பாதுகாப்பது வெள்ளைக் குதிரை. இது வெற்றியைக் குறிப்பதாகும். இந்த வீரனின் கைகளில் வில்லும், தலையில் வெற்றியைக் குறிக்கும் கிரீடமும் சின்னமாக கருதப்படுகிறது. இரண்டாவது சிவப்புக் குதிரை. இந்த வீரனின் கைகளில் உள்ள நீளமான வாள்தான் அந்த இரண்டாவது முத்திரை. மூன்றாவது கருப்புக் குதிரை. அதன் மீதுள்ள வீரனின் கைகளில் ஆயுதங்கள் எதுவும் இருக்காது. தராசு மட்டுமே இருக்கும். நியாயத்தையும், நீதியையும் இந்தச் சின்னம் குறிக்கின்றது. நான்காவது, நிறங்களற்ற வெளிறிய குதிரை. அதன் மீதுள்ள வீரனின் முகம் வெறும் மண்டை ஓடு. அவனது கைகளில் வெறுமையைக் குறிக்கும் ஒரு சின்னமாக ஒரு ஆயுதம் தலைகீழாக இருக்கும். கிரேக்க புராணங்களின் படி, கீழுலகம் அல்லது இறந்த பின் செல்லும் உலகம் அல்லது பாதாளம் அல்லது ஆவி உலகம் அல்லது நரகம். இவையனைத்தும் இவனைப் பின் தொடர்ந்து வரும். இதுவே அந்த நான்காவது சின்னம்.

இந்த நான்கையும் Conquest, War, Famine and Death என்று வருணிக்கின்றனர். அதாவது, வெற்றி, போர், பஞ்சம் மற்றும் மரணம்.

இவை போக மேலும் மூன்று முத்திரைகள் உள்ளன. வதைபட்டு அல்லது தியாகம் செய்து இறந்தவர்களின் ஆவிகளை ஐந்தாவது முத்திரையாகவும், அதில் வெள்ளைக் கயிறு சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கும். ஆறாவதாக நிலநடுக்கத்தை முத்திரையாகவும் இருண்மையை சின்னமாகவும் பொறிக்கப்பட்டிருக்கும். ஏழாவது முத்திரையில் ஏழு தேவதைகள், ஏழு ட்ரம்பெட்டுகளைக் (Trumpets) கொண்ட சின்னமாக பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்தக் கடைசி மூன்றும், முதல் நான்கு முத்திரைகளான Four Horsemen-இல் சேராது.

இந்த ஏழு முத்திரைகளும் ஏழு ரகசியத் தகவல்களைக் கொண்டிருக்கும். இதனை ஆடு அல்லது சிங்கம் ‘Lamb/Lion’ மட்டுமே திறக்கவல்லது என்றும், அந்த ஆடு ஏழு கொம்புகளையும், ஏழு கண்களையும் கொண்டதென்றும் கூறுகின்றனர். இதில் ஆடு அல்லது சிங்கம் என்று குறிப்பிடப்படுபவர் வேறு யாருமல்ல. ஏசு கிறிஸ்துவைத்தான் அவ்வாறு அழைக்கின்றனர். மேலுள்ள ஓவியத்தில் கருப்புக் குதிரைக்கும் சிவப்பு குதிரைக்கும் மேலாக ஒரு ஆட்டின் படம் வரையப்பட்டிருக்கும். அது புதிய ஏற்பாட்டை வாசித்துக் கொண்டிருப்பது போலவும் வரையப்பட்டிருக்கும். இறந்து உயிர்த்தெழுந்த ஏசுவை விண்ணகத்தோர் ஆட்டுக்குட்டி வடிவத்தில் வழிபட்டதாக ஒரு வரலாறு உண்டு.



Four Horsemen –இன் உண்மையான வரலாறு இதுதான். ஆனால், ஹாலிவுட் படங்களில் இந்தப் பெயரை மட்டும் எடுத்துக் கொண்டு புனையப்பட்ட கதைகள் ஏராளம். அப்படி இவற்றை மையமாகக் கொண்டு இந்த வருடத்திலேயே அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஹாலிவுட்டில் வெளியாகவிருக்கின்றது. X-Men : Apocalypse மற்றும் Now You See Me - 2






- தொடரும்.

Saturday, March 19, 2016

Black Panther - Origin 2


Black Panther  - ஒரு அறிமுகம் – 2

மார்வெல் இதுவரை முறையே (அவெஞ்சர்ஸ் மற்றும் இதர சூப்பர் ஹீரோ படங்களில் தலை காட்டியதல்லாமல்)

Hulk – 2,
Iron Man – 3
Thor – 2
Captain America – 2
Ant-Man - 1

தனது சூப்பர் ஹீரோக்களுக்கான Solo Debut படங்களை எடுத்திருக்கிறது. ஆனால், Agent Romanoff மற்றும் Hawk-eye இவர்களுக்கென தனித்தனி Solo debut எடுத்திருக்கவில்லை. இருவரும் முறையே Iron Man 2, மற்றும் Thor படங்களில் அறிமுகம் செய்யப்பட்டனர். இவர்கள் S.H.E.I.L.D ஏஜென்டுகள் மட்டுமே. Vision மற்றும் Wanda Maximoff இருவரும் அவெஞ்சர் பார்ட் 2 வில் அறிமுகமானார்கள். Falcon கேப்டன் அமெரிக்கா பார் 2 வில் அறிமிகம் செய்யப்பட்டார். ஆனால் ப்ளாக் பேந்தர் அப்படியல்ல. மார்வெலின் மெயின்ஸ்ட்ரீம் ஹீரோக்களில் முதலாவது சூப்பர் ஹீரோ. அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்திற்கென தனியாக ஒரு Debut செய்யாமல், நேரடியாக Captain America : Civil War இல் பத்தோடு பதினொன்றாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் என்ன?




அதற்கு முன்னர் நாம் ட்’ச்சக்கா-வின் வாழ்க்கை வரலாற்றை சற்றே தோண்டி எடுக்க வேண்டும். காமிக்ஸ் கதைகளின் படி ப்ளாக் பேந்தர் என்ற கதாபாத்திரம் அறிமுகமானது Fantastic Four காமிக்ஸில் தான். பின்பு தனிப்பெறும் இடத்தை ரசிகர்கள் மத்தியில் இந்த கதாபாத்திரம் இடம் பிடித்ததற்கு காரணம், ஒரு நாட்டையே ஆளும் ராஜாவே சூப்பர் ஹீரோவாக இருந்தது. அவரது மரபு. அரசர் குலம். கறுப்பின சூப்பர் ஹீரோ. வைப்ரேனியத்தால் ஆன சூப்பர் ஹீரோ உடை. மேலும் ப்ளாக் பேந்தரின் கதா பாத்திர வடிவமைப்பு. கிட்டத்தட்ட பேட் மேனுக்கும் இவருக்கும் இடையே சில ஒற்றுமைகள் உண்டு. உடைகள் மற்றும் ஆயுதம் ஏந்தாமல் சண்டையிடுதல் போன்றவை அதற்கு உதாரணங்கள்.




ட்’ச்சக்கா-விற்கு காமிக்ஸில் இரண்டு மனைவிகள். முதலாவது மனைவி ட்’ச்சாலா பிறந்தவுடன் இறந்துவிடுவார். இரண்டாவது மனைவி தன்னுடன் இருந்த ஒரு ஹன்டரோடு ஓடிப் போனதாகவும் ஒரு கதை உண்டு. பிறகெப்படி ஸூரி பிறந்திருப்பாள்? இதில் எக்கச்சக்க குழப்பங்களும் உண்டு. காரணம், மார்வெல் காமிக்ஸ்கள் ஆரம்பத்தில் பல்வேறு பெயர்களில் வெளியானது. அதில் அட்லாஸ் காமிக்ஸ் என்பதும் மார்வெலின் முந்தைய பெயர்களில் ஒன்று. இதில்தான் ப்ளாக் பேந்தரரறிமுகம் செய்யப்பட்டார். அட்லாஸிற்கும், மார்வெலுக்கும் கதாபாத்திரங்களை இன்டர்சேஞ்ச் செய்யப்பட்ட பொழுது கதைகளில் சில மாற்றங்கள்/ அப்கிரேட் செய்யப்பட்டது. ஆகவே, சில குழப்பங்கள் நீடிக்கிறது. இன்றுவரை.

அதே போல ட்’சக்காவின் இறப்பு. அவரைக் கொன்றது ‘Ulysses Klaw’ என்பதுதான் முந்தைய வரலாறு. ஆனால், கேப்டன் அமெரிக்கா – சிவில் வார் படத்தில் அந்த வரலாறு மாற்றப்பட்டிருக்கிறது. அதைச் சொல்வது ஸ்பாய்லராக மாற வாய்ப்பிருப்பதால் தவிர்த்து விடுவோம். படம் வரும் வரை அமைதி காப்போமாக.

Captain America : Civil War படத்தில் இரண்டு அணிகள் உள்ளதை ட்ரெய்லரில் பார்த்திருக்கலாம். Iron Man vs. Captain America. இதில் ப்ளாக் பேந்தர் இடம்பெறப் போவது அயன் மேன் அணியில். ஒரு விசயத்தை முன்னரே தெளிவு படுத்துகிறேன். கேப்டன் அமெரிக்காவும் ட்’ச்சக்காவும் இரண்டாம் உலக யுத்தத்தில் ஒன்றாக சண்டையிட்ட கதைகளுண்டு. அப்படியிருந்தும் ட்’ச்சாலா, கேப்டன் அமெரிக்காவின் அணியில் இல்லாமல், அயன் மேன் அணியில் இணையக் காரணம் என்ன?

மார்வெல் யுனிவர்சில் பணக்கார சூப்பர் ஹீரோ அயன் மேன் என்பதுதான் இதுவரை நாம் அறிந்தவை. ஆனால், அது உண்மையல்ல. அயன் மேன் பணக்காரனாக அந்த ஊரில் இருக்கிறார். அவ்வளவே! உண்மையில், பணக்காரர், ராஜ பரம்பரை, அரசர் குலத்தைச் சேர்ந்தவர் ப்ளாக் பேந்தர் மட்டுமே. தோர் அல்ல. அவர் கேர் ஆப் வேற கிரகம்.

அந்தக் காரணம்,

டோனி ஸ்டார்க்கின் பெற்றோர்கள், ஹோவார்ட் ஸ்டார்க் மற்றும் மரியா ஸ்டார்க் இருவரும் ஒரு கார் விபத்தில் மரணமடைந்தனர். அந்த விபத்தை set-up செய்தது Bucky Barnes அலைஸ் Winter Soldier. இதனாலேயே அயன் மேன் டோனி ஸ்டார்க்கும், கேப்டன் அமெரிக்கா ஸ்டீவ் ரோஜர்ஸும் முட்டிக் கொள்ள காரணம் போதுமானது.

Bucky Barnes கேப்டன் அமெரிக்காவுடன் இணைந்து உலகப் போரில் ஜெர்மனியை எதிர்த்துப் போரிட்ட ஒரு ராணுவ வீரன். ஆனால் HYDRA-வின் வெடிகுண்டு ஒன்றை செயலிழக்கச் சென்றதில் கேப்டன் அமெரிக்கா மட்டும் தப்பித்து விடுகிறார். ஆனால் Bucky அந்த இடத்திலேயே தவறி பெரிய பள்ளத்தாக்கில் விழுந்து விடுகிறான். அவன் இறந்து விட்டதாக எண்ணிக் கொண்டு திரும்பி விடுகிறார் கேப்டன் அமெரிக்கா. இவையனைத்தும் Captain America : The First Avenger படத்திலேயே நாம் பார்த்திருக்கலாம். ஆனால், Bucky இறக்கவில்லை. அவன் ‘ஹைட்ரா’வால் காப்பாற்றப் பட்டு ரஷ்யாவின் வின்டர் சோல்ஜர் ப்ரோகிராமிற்கு அனுப்பப்படுகிறான். அவர்கள் அவனது மூளையிலிருந்த பழைய நினைவுகள் அழித்து விடுகின்றனர். மாறாக, ஹைட்ராவின் கட்டளைக்கு மட்டுமே கீழ்படியும் வின்டர் சோல்ஜராக மாற்றி விடுகின்றனர். ஒவ்வொரு முறையும் அவர்களது கட்டளையை நிறைவேற்றியதும் Bucky-யின் நினைவுகள் சலவை செய்யப்படுகிறது. ஆகவே அவன் யார் யாரைக் கொன்றான், அடுத்து என்ன செய்யப் போகிறான், தான் யார் என்ற ஒரு தகவலும் அவனது மூளையில் இருக்காது. உண்மையில் வின்டர் சோல்ஜர் ப்ராஜெக்ட் என்பது சூப்பர் வில்லன்களை உருவாக்கும் ஹைட்ராவின் முயற்சி. இவற்றில் பாதிக்கும் மேற்பட்ட தகவல்கள் Captain America : The Winter Soldier படம் பார்த்தார்களுக்கு புரிந்திருக்கும். ஆனால், இவ்வளவு டீடெய்லாக சிவில் வார் படத்தில் காட்டப்படும். ஏனென்றால், அவெஞ்சர்களுக்குள் சிவில் வார் வரக் காரணமே Bucky Barnes அலைஸ் Winter Soldier தான்.


ப்ளாக் பேந்தர் உண்மையில் மோதப் போவது கேப்டன் அமெரிக்காவோடு அல்ல. வின்டர் சோல்ஜருடன் ;) 

சிவில் வார் இந்த வருடம் ஏப்ரல் 28-ல் ரிலீஸாகிறது. ப்ளாக் பேந்தருக்கான Solo Debut திரைப்படம் - February, 16, 2018 இல் வெளியாகவிருக்கிறது.

Friday, March 18, 2016

Black Panther - Origin 1


Black Panther - ஓரு அறிமுகம் 

மார்வெல் காமிக்ஸில் அமெரிக்காவைக் காப்பாற்ற ஒரு மிகப் பெரிய சூப்பர் ஹீரோ கும்பலே உண்டு. ஆனால், கறுப்பின மக்களைக் காக்க அதுவும் ஆப்ரிக்கக் கண்டத்திற்கே ஒரே ஒரு சூப்பர் ஹீரோதான் இருக்கிறார். Black Panther. இவரது இயற்பெயர் ட்’ச்சக்கா (T’Chaka).

ஆப்ரிக்காவில் உள்ள ‘வகாண்டா’வில் உலகில் வேறு எங்கும் அதிகம் கிடைக்காத இரண்டு வளங்கள் உண்டு. அதில் ஒன்று மிகவும் அபூர்வமானது. ஒன்று எண்ணெய் வளம். மற்றொன்று அபூர்வமான ‘வைப்ரேனியம்’ (Vibranium). பொதுவாக வகாண்டியர்கள் தனது கனிம வளங்களையும், அறிவியல் கண்டுபிடிப்புக்களையும், அபூர்வமான மருந்துக்களையும் மற்ற நாடுகளிடம் பகிர்ந்து கொள்வதில்லை. அதேபோல வேறு நாடுகளோடு வாணிபமும் செய்வதில்லை. அவர்களுக்கு தேவையானதை அவர்களே உருவாக்கிக் கொள்கின்றனர். இதனாலேயே இவர்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள். இந்த மாதிரி விசயங்களில் அமெரிக்கர்களுக்குத் தான் அதாவது கழுகுக்கு மூக்கு வேர்த்து விடுமே. அந்த நாட்டின் வளங்களை தங்களோடு வாணிபம் செய்யுமாறு அழைப்பு விடுக்கிறது. ஆனால், அந்த அழைப்பினை ப்ளாக் பேந்தர் நிராகரித்து விடுகிறார். இதே போல மற்ற நாடுகளும் வகாண்டாவிடம் கெஞ்சுகிறது. ஆனால் ப்ளாக் பேந்தர் உள்ளவரை அது நடக்காது என்று வேறு ஒரு முடிவுக்கு வருகிறார்கள். அந்த திட்டம் தான் – ப்ளாக் பேந்தரை அழிப்பது.

‘க்ளா’ (Klaw) என்றொருவனை ஏவுகிறார்கள். அவன் ஒரு தொழில் முறைக் கொலைகாரன். அத்தோடல்லாமல், ப்ளாக் பேந்தர் மீதும், வகாண்டாவின் மீதும் பரம்பரை பரம்பரையாக பழி தீர்த்துக் கொள்ளக் காத்திருக்கும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவன். சில தலைமுறைகளுக்கு முன்னால் இவனது பாட்டனார், வகாண்டாவைப் பற்றி சரியாக அறிந்து கொள்ளாமல், அந்த நாட்டின் மீது ஒரு சிறு குழுவுடன் ஊடுறுவ முயற்சிக்கின்றார். ஆனால், ப்ளாக் பேந்தரின் காவலில் உள்ள ராஜ்ஜியம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. உடன் வந்த அனைவரும் ப்ளாக் பேந்தரால் கண்ணிமைக்கும் நேரத்தில் கொல்லப் படுகின்றனர். மேலும், உயிர் மீது ஆசையிருந்தால் கடைசி வாய்ப்பு தருகிறேன். இப்படியே திரும்பிப் போய்விடு என்று ப்ளாக் பேந்தரால் எச்சரிக்கையும் செய்யப் படுகிறார். இதனால் மேலும் ஆத்திரமடைந்தவர் துப்பாக்கியால் ப்ளாக் பேந்தரை சுட முயலும் போது கொல்லப்படுகிறார். கடைசியாக அவர் அணிந்திருந்த ஒற்றைக் காலணி மட்டுமே அவரது குடும்பத்திற்கு திரும்பக் கிடைக்கிறது. இதனால் பழி தீர்க்க பல தலைமுறைகளாக க்ளா-வின் குடும்பத்தார் காத்திருக்கின்றனர். அதில் கடைசி ஆளும் க்ளா-தான்.

ப்ளாக் பேந்தருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் ட்’ச்சாலா (T’Chala). எட்டு வயதே ஆனவன். இளையவள் ஸுரி (Shuri). ஐந்து வயது. இவர் தனது குடும்பத்தாரோடு பேசிக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஒரு புல்லட் வேகமாக வந்து ஜன்னல் கண்ணாடியில் மோதுகிறது. ஆனால் ஜன்னல் கண்ணாடியை துளைத்து உள்ளே நுழையவில்லை. காரணம் அந்த அரண்மனையே வைப்ரேனியம் கலப்பில் உருவானவை. வைப்ரேனியத்திற்கு உள்ள அபூர்வ சக்தியும் அதுதான். எவ்வளவு பெரிய அதிர்வுகளையும் தாங்கும். அந்த புல்லட் க்ளா-வின் துப்பாக்கியிலிருந்து வெளியேறியதுதான். ஆனால், அவன் இந்த வைப்ரேனியத் தடுப்பினைப் பற்றி அறிந்திருக்கவில்லை. மேலும் அவனால் வெறுமனே திரும்பிச் செல்ல இயலவில்லை. ட்’ச்சக்காவை கொன்றே ஆக வேண்டும். அரண்மனைக்குள் அத்துமீறி அப்போதே நுழைந்து பெரும் நாசத்தை விளைவிக்கிறான். ட்’ச்சக்காவின் உடனிருந்த பலர் உயிரிழக்கின்றனர். இதைக் கண்டு கொதித்தெழுந்த ட்’ச்சக்கா அலைஸ் ப்ளாக் பேந்தர் வெறும் கைகளோடு க்ளா-வின் மீது பாய்கிறார். க்ளா-வோ தன்னிடம் அதி நவீன துப்பாக்கி இருப்பதால் தைரியமாக அவரை எதிர்த்து நிற்கிறான். ட்’ச்சக்கா பாய்ந்து வருகையிலேயே அவரது மணிக்கட்டில் கட்டியிருந்த உலோகக் காப்பிலிருந்து வைப்ரேனியக் கை ஒன்று ஐந்து கத்தி போன்ற விரல்களோடு முளைக்கிறது. அதிர்ச்சியில் க்ளா உறைந்து நிற்கையில் ட்’ச்சக்கா அவனது முகத்தின் ஒரு பகுதியை அந்த வைப்ரேனியக் கைகளால் கிழிக்கிறார். அதில் அவனது இடது கண்ணும் சேர்ந்து கிழிந்து விடுகிறது. துரதிர்ஷ்டவசமாக தனது கையிலிருந்த துப்பாக்கியின் ட்ரிகர் விசை அனிச்சையாக அழுத்தப் பட்டதில், அதன் தோட்டா வெளியேறி ட்’ச்சக்கா-வின் உயிரைக் குடிக்கின்றது. ப்ளாக் பேந்தர் இறந்து விடுகிறார். அந்தக் குடும்பத்தில் ஒருவரையும் மிச்சம் விடக் கூடாதென அவரது மனைவியை சுட எத்தனிக்கையில், இவன் வசமிருந்த மற்றொரு துப்பாக்கி இவனைச் சுடுகிறது. சுட்டது ப்ளாக் பேந்தரின் மகன் ட்’ச்சாலா. ஆனால், க்ளா இறக்கவில்லை. மேலும் அங்கிருந்தால் தனது உயிருக்கு ஆபத்தென்று அங்கிருந்து தப்பியோடி விடுகிறான்.

அதன் பிறகு வகாண்டாவை சி’யான் (S’yan) என்பவர் ப்ளாக் பேந்தராக இருந்து ஆட்சி செய்து வருகிறார். இவர் ட்’ச்சக்கா-வின் சகோதரர். அஸூரியின் இரண்டாவது மகன். அவர் இறந்த பிறகு அவரது மூத்த மகன் ட்'ச்சக்கா-விற்கு முடிசூட்டப்படுகிறது. ட்'ச்சக்காவின் கொலைக்குப் பின் சி'யான் அந்த பொறுப்பை ஏற்கிறார்.


வகாண்டாவில் ஆண்டுக்கொரு முறை ‘Battle for the Crown’ என்றொரு மல்யுத்தப் போட்டி நடத்தப்படும். வகாண்டாவாசிகள் யார் வேண்டுமானாலும் ப்ளாக் பேந்தரோடு மோதலாம். அதில் ப்ளாக் பேந்தரை வெல்பவர்களே அடுத்த ப்ளாக் பேந்தர். அன்றே அவரை வகாண்டாவின் ராஜாவென முடிசூட்டப்படுவார்கள். அப்படி ஒரு வருடம் நடந்த போட்டியில் சி’யான்-ஐ முகமூடி அணிந்த வீரன் ஒருவன் ஜெயித்து விடுகிறான். நடுவர்கள் அவனது முகமூடியை கழட்டும்படி கேட்க, அந்த வீரன் தனது முகமூடியை கழட்ட, அவனைக் கண்டு கொண்ட மக்கள் அவனது பெயரை, ‘ட்’ச்சாலா… ட்’ச்சாலா…’ என உச்சரிக்க அவனுக்கு ப்ளாக் பேந்தராகவும், நாட்டின் ராஜாவாகவும் முடிசூட்டப்படுகிறது.

ட்’ச்சாலா-விற்கு ஒரு காதலி இருக்கிறாள். ‘Ororo Munroe’ என்பது அவளது பெயர். அதுசரி, யாரிந்த ‘ஒரோரோ முன்ரோ’?

சிறு வயதில் ஆப்ரிக்க கிராமத்தில் பசிக்காக, ட்’ச்சாலா-விடம் திருடப் பார்த்தவள். பின்பு நாளாவட்டத்தில் இருவரும் காதலில் விழுந்தனர். பிறகு ட்’ச்சாலா நாடு திரும்பியதும், அவள் தனது வழியில் அமெரிக்கா சென்று விடுகிறாள். அவள் ஒரு மியூட்டனும் கூட ‘ஸ்டார்ம்’ (Storm) என்பது அவளது தற்போதைய பெயர். X-Men ஆக சார்லஸ் சேவியரிடம் இருக்கிறாள்.


-தொடரும்.